ஐன்ஸ்டீன் | தினம் ஒரு அறிவியல் மேதை

ஐன்ஸ்டீன்

ஜெர்மனியில், யூதக் குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதில் மூன்று வயது வரை பேசாமல் இருந்த இவரை மந்தமான குழந்தை என்றே எண்ணினார்கள். அவருக்கு அவரின் அப்பா கொடுத்த காம்பஸ் பெரிய ஈர்ப்பை உண்டு செய்தது. அது எப்படி மிகச் சரியாகத் திசைகாட்டுகிறது !

பள்ளியில் சொந்தமாகவே நுண்கணிதத்தைக் கற்றுத் தேறினார். சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும், சொற்களாலும் சிந்திப்பதைக் காட்டிலும் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன்.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துப் போனதும், சுவிட்சர்லாந்துக்குச் சென்றார் ஐன்ஸ்டீன், புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். 'உலகிலேயே ஒன்றரை கிலோ அதிசயத்தை அதிகம் பயன்படுத்திய மனிதனுக்கே இடம் கிடைக்காத கல்லூரி இது.' என்கிற வாசகம் இன்றைக்கும் அலங்கரிக்கிறது.

ஐன்ஸ்டீனுக்குக் கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்து ஆராய்வது. அப்பொழுது எழுதி வெளியிட்ட மூன்று கட்டுரைகள் 'இயற்பியல் உலகின் புதிய ஏற்பாடு' எனப் புகழப்படுகின்றன. அவரின் சார்பியல் தத்துவம்தான் மிகவும் விவாதத்துக்கு உள்ளானது. இவரின் இந்தச் சிந்தனைதான் எத்தனை

அளப்பரிய மாற்றங்களை அறிவியல் உலகில் உண்டு செய்து இருக்கிறது என நினைக்கிற பொழுது சிலிர்க்கிறது நியூட்டன் எனும் மாமேதையின் கருத்துக்களை எதிர்த்து ஒரு வார்த்தை

கூடப் பேச பலபேர் பயந்த பொழுது ஐன்ஸ்டீன் மட்டும் மிக அழுத்தந்திருத்தமாகத் தன் கோட்பாடுகளை உலகின் முன் வைத்தார் ! சார்பியல் தத்துவம் உதித்தது.

இத்தனைக்கும் அவர் என்றைக்கும் இயற்பியல் ஆய்வகங்களில் மூழ்கிக்கிடந்தவர் இல்லை ! பல இடங்களில் சார்பியலின் அடிப்படைகளை எளிமையாக விளக்கிவந்தார். அவர் ஒளி மாதிரி சில சங்கதிகள்தான் மாறாதவை. காலம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது என்றார். எளிமையாக அதை ஐன்ஸ்டீன் இப்படி விளக்குவார். “ஒரு ஸ்டவ் அடுப்பின் மீது உட்கார்ந்து பாருங்கள் ஒரு நிமிடம் ஒருமணிநேரமாகத் தோன்றும்; அழகான ஒரு பெண்ணோடு உரையாடிக் கொண்டிருங்கள் - ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போலத் தோன்றும்".

ஸ்டீவன் ஹாகிங் இதை "நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும்போது ரிலேட்டிவிட்டியின்படி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள். ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாதபட்சத்தில்!" என்று விளக்கினார்.

சார்பியல் சார்ந்து உருவான E=mc' எனும் சூத்திரம் அதில் ஒன்று. இந்தச் சூத்திரத்தில் ஆற்றலானது நிறையோடு தொடர்புடையது என்றும் நிறையில் ஏற்படும் இழப்பு ஆற்றலாக வெளிப்படும் எனவும் வரையறுத்து சொன்னார். இதன்மீது ஆரம்பகாலத்தில் ஏகத்துக்கும் விவாதங்கள் எழுந்தன. அதனாலேயே நோபல் பரிசு இந்த ஆய்வுத்தாளுக்குத் தரப்படாமல் ஒளிமின் விளைவுக்குத் தரப்பட்டது. எனினும், இந்த 'On the Electrodynamics of Moving Bodies' ஆய்வுத்தாளினை அடிப்படையாகக் கொண்டு அணுகுண்டு உருவானது சோகமான வரலாறு. 'A பாம் ‘ப்ராஜக்டை ஹெய்சன்பர்கைக் கொண்டு ஜெர்மனியில் ஹிட்லர் தொடங்கி இருப்பதைப் பற்றிக் கவலையோடு அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதினார். அமெரிக்கா அணுகுண்டு சார்ந்த ஆய்வில் இறங்கவேண்டும் என்ற அவரின் வார்த்தையைச் செயல்படுத்தி அணுகுண்டு தயாரித்தது அமெரிக்கா.

உலகை இறைவன் எப்படிப் படைத்தார் எனக் கண்டறிந்துவிட வேண்டும் எனச் சொன்ன இவருக்கு சமயங்களில் பெயரேமறந்துவிடும். வீட்டுக்கு வழிதெரியாமல் நின்ற கதைகள் உண்டு. டிஸ்லெக்சியா வேறு இருந்தது. பின் எப்படி இயற்பியல் உலகின் சாதனைகள் சாத்தியமானது எனக் கேட்டபொழுது "எனக்கென்று தனித்திறமை எதுவுமில்லை. எல்லையில்லா ஆர்வம் மற்றும் அறிவுக்கான தேடல் என்னைச் செலுத்துகிறது. சிக்கல்களோடு நான் கொஞ்சம் கூடுதலாகப் போராடுகிறேன் என்றார். இன்றைய கல்விமுறை மீன்களை மரமேறுவதன் மூலம் எடைபோடுகிறது என்று விமர்சிக்கவும் செய்தார்.

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany