தாமஸ் ஆல்வா எடிசன் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


தாமஸ் ஆல்வா எடிசன்

டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுப் பள்ளியில் படிக்க லாயக்கில்லை எனத் துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார். உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளைத் தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார். ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

முதன்முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். அதில் தில்லுமுல்லு செய்ய முடியாது. அரசியல்வாதிகள் அதை ஏற்கவில்லை. இனிமேல் மக்களுக்கு உதவும் பொருட்களையே கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார் அவர் ஊமைப்படங்களைப் பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பிப் பொருட்களைத் தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும் பொருள் சிக்கவில்லை, "நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் எனச் சொல்ல மாட்டேன்; பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது ! எனக் கற்றுக்கொண்டேன்." என்றார். எடிசன் இறுதியாகப் பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார். அதைச் சாதித்த பொழுது நள்ளிரவு. மனைவியிடம் ஆர்வமாகக் காண்பித்த பொழுது, "நடுராத்திரியில் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு; கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !” என்றார்.

தந்தி அனுப்புவதில் பெரிய ஆர்வம் கொண்டிருந்த எடிசன் தன் முதல் இரு பிள்ளைகளுக்கு டாட் மற்றும் டாஷ் என்று தந்தியின் குறிச்சொற்களால் பெயரிட்டார். ஹலோ என்று போனில் அழைக்கும் முறையைக்கொண்டு வந்ததும் அவரே.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல், பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளைப் பெற்று இருந்தார் என்பதற்குப் பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும். வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்துச் சொன்னவர்.

அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார். ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்; அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன. ரேடியோ கரகரத்தது, "எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது!" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாகச் சொன்னது, “எடிசன் பிறந்ததற்குப் பின் உலகம் இப்படித்தான் இருந்தது!”


2 Comments

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany