ஜி.டி.நாயுடு | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ஜி.டி.நாயுடு

தான் இருந்த, தொட்ட எல்லாத் துறையிலும் சாதித்தவர் ஜி.டி. நாயுடு.

பள்ளிப்படிப்பை நான்காவ தோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம்இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்துப் பணம் சேர்த்து வாங்கி, பிரித்துச் சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600 க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.

மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் உருவாக்கினார். ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களைக் கெடுப்பவை சினிமா, அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் எனத் தெளிவாகச் சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை, ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சாதித்தும் காட்டினார்.

எஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க 'vibrator tester' என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ளப் பிளேடு, பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள். இன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.

இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. நாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்கத் தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது. ரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்துச் செய்து வருமான வரிக் கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.

ஆய்வாளர் ஹரிஷ் தாமோதரன், 'இந்தியாவின் புதிய முதலாளிகள்' என்கிற தன்னுடைய நூலில், 'கோவை இந்தியாவின் இயந்திர உற்பத்தியில் 1,200 கோடி ரூபாய் சந்தையைப் பெற்றிருப்பதற்கான அடித்தளம் ஜி.டி.நாயுடு அவர்களாலேயே போடப்பட்டது' என்று புகழ்கிறார்.

அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். 'அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்'. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம்.

‘21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்துத் தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்'

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany